Ads 468x60px

Tuesday, February 3, 2015

சண்டியர் - துவக்க விழா

மற்ற தமிழ் படங்கள் போல் பூஜையை சென்னையிலே போடாமல், உலகநாயகன் தன் "சண்டியர்" படத்தின்  துவக்க விழாவை "மதுரை மாநகரில்" 2003-ல் நடத்தினார்!!!

அது மட்டுமல்ல, "சண்டியர்" பட துவக்க விழா அழைப்பிதழை, வித்தியாசமாக,  முதல் தகவல் அறிக்கை(FIR) மாடலில் உருவாக்கி, புதுமையை புகுத்துவதில் என்றுமே தானே முன்னோடி என்பதை அழைப்பிதழிலும் நிரூபித்திருந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்!!!

இந்த விழாவிற்கும் என் தளத்தின் (www.SandiyarKaran.com) பெயருக்குமே மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. இந்த விழாவில் தான் முதல் முறையாக என் தலைவன் கமல்ஹாசரை நேரில் பார்த்தேன்.

பின், "சண்டியர்" என்ற அடைமொழியை என் பெயருடன் இணைத்து  YAHOO GROUPS-ல் பயன் படுத்த தொடங்கினேன், அப்படியே ORKUT, BLOG, FACEBOOK, TWITTER என  என் பெயருடன் கலந்து விட்டது.

தினமலரில் "சண்டியர்" துவக்க விழா மதுரையில், என்று படித்தவுடன் காலையிலே மதுரைக்கு கிளம்பி விட்டேன், அங்கு காலை 11 மணியளவில், பெரியார் பேருந்து நிலையத்திலுருந்து விழா நடக்கும் மைதானத்திற்கு பஸ் ஏறினேன், அந்த இடத்திற்கு செல்லும் வரை எத்தனை வித விதமான "கமல் போஸ்டர்கள்"!!! இன்றிருப்பது போல கேமரா போன் என்னிடம் அன்றிருந்திருந்தால், அத்தனை போஸ்டர்களையும் கண்டிப்பாக உங்கள் பார்வைக்கு இணைத்திருப்பேன்!!!

மாலை 4 மணியளவில் கமல் பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து மைதானத்திற்கு கார்களிலும் வேன்களிலும் வரத்தொடங்கினர். கமல்ஹாசன் நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஐபிகளுக்கும் மேடைக்கருகில் இடம் அமைத்து வேலி போடப்பட்டிருந்தது, அதை தாண்டி ரசிகர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் முதல் வரிசையில் வேலி தாண்டி செம்மண் தரையில் இடத்தை பிடித்து விட்டேன்.

சிறிது நேரத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தன் FACEBOOK அதிகாரப்பூர்வ  பக்கத்தில் ஏதேனும் அப்டேட் செய்தால் லைக்குகள் குவிவது போல, கமல் ரசிகர்கள் குவிந்தனர்.

என் இடமும் பறிபோனது, தனியாக சென்றிருந்ததால் பின் வரிசைக்கு தள்ளப்பட்டேன். இப்போது போல அன்றிருந்திருந்தால் மாவட்ட நிர்வாகிகளின் வரிசையில் உட்கார்ந்திருக்கலாம்.

கமல்ஹாசரை ஒரு முறை தூரத்திலிருந்து பார்த்தால் போதும் என்றிருந்த என்னை, "சண்டியர்" விழாவில் ஆரம்பித்து, உலகநாயகனின் அருகிலேயே கொண்டு நிறுத்தி விட்டது  "சண்டியர்" என்ற பெயர்!!!

மாலை 5 மணியளவில், "கொம்புல பூவ சுத்தி" என்ற பாடலில் வரும் நாட்டுப்புற பேண்டு குழு வாசிக்க ஆரம்பிக்க ஆட்டம் ஆரம்பமானது.

உலகநாயகன் எப்போது வருவார் என்று மட்டும் எதிர்நோக்கியிருந்த எனக்கு, என் ஆடைகள் செம்மண்ணால் பூசப்பட்டதை காண நேரமில்லை.

கருப்பு சட்டையுடன் பட்டு வேட்டியில் சண்டியர் கெட்டப்பில், விழா நாயகன் கமல்ஹாசர் மேடையில் தோன்றி, கைகளை கூப்பி ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்ததை கண்டு மெய்சிலிர்த்து கொண்டிருந்த போது, பின் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து முன்னே வர ஆரம்பித்து, நெரிசல் ஏற்பட்டு, கலைந்து, என் உயிர் மீண்டும் எனக்குள் வர ஆரம்பித்தது ("நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள்" என்ற செய்தி படித்தால் அது எப்படி என்று தோன்றும்? ஆனால் அன்று தான் புரிந்தது). அந்த அளவுக்கு நிற்க கூட இடம் இல்லாமல் ரசிகர்களால் மைதானம் நிரம்பியிருந்தது.



திரைத்துறையில், கமல்ஹாசன் மட்டுமே, தன் ரசிகர்களை மட்டும் வைத்து,  திறந்த வெளி மைதானத்தில் பட துவக்க விழா (சண்டியர்), ஆடியோ வெளியீட்டு விழா (விஸ்வரூபம்),  மக்கள் பிரச்சினைக்கு பேரணிகள்,
ரசிகர்கள் மாநாடு ( இரண்டு முறைகள் ) என நடத்தி காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment